பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் , பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் இனி அந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் முகிதின் யாசினுக்குப் பதிலாக பெரிகாத்தான் நேஷனல் தலைவராக நியமிக்கப்பட்ட சம்சூரி, கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்சூரி, "யார் பிரதமர் வேட்பாளர் என்பதை விட, தற்போது பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்துவதும், நாடு முழுவதும் ஒற்றுமையை நிலைநிறுத்துவதும் தான் எங்களின் முதல் முன்னுரிமை. எதிர்வரும் தேர்தலைச் சந்திக்க எங்களைத் தயார்படுத்திக் கொள்வதே இப்போதைய முக்கிய நோக்கம். ஒன்று மட்டும் உறுதி, முகிதின் யாசின் இனி பிரதமர் வேட்பாளர் கிடையாது," என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்சூரி தலைவரானதால் அவரே பிரதமர் வேட்பாளர் ஆகிவிட முடியாது என முகிதின் முன்னதாகக் கூறியிருந்த நிலையில், சம்சூரியின் இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.








