கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
ஆளும் கட்சிகள், வெற்றி பெற்ற தொகுதிகளில் மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்ற விதியை பாரிசான் நேஷனல் தொடர்ந்து கடைப்பிடிக்குமானால், அந்த கூட்டணியிலிருந்து மசீச. வெளியேறுவது ஒரு நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் சுவா சொய் லேக் வலியுறுத்தியுள்ளார்.
பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் எந்ததெந்த தொகுதிகளில் வெற்றி பெற்றனவோ அந்த தொகுதிகளில் மட்டுமே இனி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பாரிசான் நேஷனலின் நடப்பு விதி, மிக அபத்தமானதாகும் என்று டாக்டர் சுவா குறிப்பிட்டார்.
பாரிசான் நேஷனல் கூட்டணியிலிருந்து மசீச விலக வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து டாக்டர் சுவா வலியுறுத்தி வருகிறார்.
நாம், தேசிய முன்னணியில் நீண்ட காலமாகவே ஓர் உறுப்புக் கட்சியாக இருந்து வருகிறோம். அந்த கூட்டணியிலிருந்து நாம் வெளியேற விரும்பினால் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வலுவான காரணம் நமக்கு இருக்க வேண்டும்.
எனவே வெற்றிப் பெற்றத் தொகுதிகளை மட்டுமே மீண்டும் வழங்க முடியும் என்று பாரிசான் நேஷனல் உறுதியாக இருக்குமானால் அடுத்த பொதுத் தேர்தலில் மசீச. போட்டியிடுவதற்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும், சில சட்டமன்றத் தொகுதிகளே மிஞ்சும்.
இவற்றில் போட்டியிடுவதை விட முன்கூட்டியே பாரிசான் நேஷனலிருந்து விலகுவதே உத்தமம் என்று முன்னாள் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சுவா தெரிவித்தார்.