மலாக்கா, ஜூலை 14 – மலாக்கா மாநிலத்தில் பாரிசான் நேஷனல் கூட்டணி, ஜசெக வுடன் எப்போதும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், மாநில அரசில் அவர்களின் பங்களிப்பு புத்ராஜெயாவின் ஒற்றுமை அரசாங்கக் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு துணைக் கட்டமைப்பு மட்டுமே என்றும் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப ரவூப் யூசோ தெரிவித்துள்ளார்.
2021 மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பாரிசான் தனித்தே ஆட்சியமைத்ததாகவும், பிற கூட்டணிகளுடன் முறையான ஆட்சி ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மாநிலச் சட்டமன்றத்தில் 7 நியமன உறுப்பினர்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, ஜசெக.வின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் அரசுப் பதவிகளை துறந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.








