கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என பி. வேதமூர்த்தி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கின் பின்னணியில் பெர்சத்து கட்சி இருப்பதாக பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் அன்வாருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது, பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையில் வேதமூர்த்தியும் இடம் பெற்று இருந்தார்.
பொதுத் தேர்தலை எதிர்நோக்காமலேயே துன் மகாதீர் முகமதுவின் தயவால் செனட்டர் பதவி வழங்கப்பட்டு, வேதமூர்த்தி அமைச்சர் ஆனார்.
2018 இல் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அன்வார் போட்டியிட்ட போது, வேதமூர்த்தி இது குறித்து வாயைத் திறக்கவில்லை. ஆனால், இப்போது பெர்சத்து கட்சியின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, நாட்டின் சட்டத்தை மதிப்பதைப் போல வேதமூர்த்தி பாசாங்கு செய்வது வேடிக்கையாக உள்ளது என்று ஒரு வழக்கறிஞருமான ஷாரெட்ஸான் ஜோஹான் தெரிவித்தார்.
பெர்சத்துவில் தனது விசுவாசத்தைக் காண்பிக்க அன்வாரை எதிர்ப்பது போல் வேதமூர்த்தி வித்தைக் காட்டுகிறார். அன்வார் சட்டத்தை மீறித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் 2018 இல் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போதே அமைச்சர் என்ற முறையில் வேதமூர்த்தி தனது ஆட்சேபத்தைத் தெரிவித்து இருக்க வேண்டும் என்று ஷாரெட்ஸான் ஜோஹான் வலியுறுத்தினார்.