சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு, பிரான்ஸ் நீதிமன்றத்தில் எட்டு பேர் தொடுத்த வழக்கில் மலேசியா வெற்றி பெற்றுள்ளது. மலேசியாவிடமிருந்து 1,500 கோடி டாலர் அல்லது 6,904 கோடி வெள்ளி இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு சூலு வாரிசுதாரர்கள் பெற்ற ஓர் உத்தரவை ரத்து செய்வதற்கான சாத்தியத்தை உள்ளடக்கிய தீர்ப்பை பாரீஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று மாலையில் வழங்கியது.
சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டு எட்டு பிலிப்பைன்ஸ்காரர்கள் இழப்பீடு கோரி மலேசியாவிற்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பிரான்ஸ் நடுவர் மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் நடுவர் கொன்ஸாலோ ஸ்தம்பா வால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் மலேசியா முன்வைத்த வாதத்தை பாரிஸ் அப்பீல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
சூலு வாரிசுதாரர்களுக்கு மலேசியா இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரான்ஸ் நடுவர் மன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய அந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை சூலு தரப்பினர், இனி நம்பியிருக்க முடியாது. இது பொய்யான உரிமைக்கோரலாகும் என்று பாரிஸ் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சூலு வாரிசுதாரர்களின் வழக்கு மனுவை விசாரணை செய்து, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கிய நடுவர் கொன்ஸாலோ ஸ்தம்பா , தனது அதிகார வரம்பை மீறியுள்ளார் என்று பாரிஸ் அப்பீல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிபடுத்தியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்துள்ளார்.
தவிர பாரிஸ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இறுதியானது மற்றும் தீர்க்கமானதாகும். சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், மலேசியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக தொடுத்துள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும் இத்தீர்ப்பானது, மலேசியாவிடமிருந்து உரிமைகோருபவர்களுக்கும் அவர்களுக்கு நிதியளிப்பவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும் என்று தாம் நம்புவதாக அஸாலினா ஒத்மான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
