நாட்டில் தற்போது அதிகரித்து வரும் இனவாதப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த, ரத்து செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான ISA-வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மலேசியா இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மகிமா-வின் தலைவர் டத்தோ சிவகுமார் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் ஒரு பகுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய சூழல் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும், மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுபவர்களை, விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தாமல், உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நடைமுறையிலுள்ள சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அடுத்த நாளே வெளியே வந்துவிடும் சூழலில், கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டுமே அவர்களைக் கட்டுப்படுத்த இயலும் என்றும் டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய டத்தோ சிவகுமார், நாட்டில் சட்டம் மற்றும் போலீஸ் இருக்கும்போது, மற்ற எவரும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.








