இவ்வாண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, அரசுத் துறைகள், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளே இம்முடிவுக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ பயணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட அரசு துறைகளில், வெளிநாட்டு பயணங்கள் குறைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதும், கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிய அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு செலவுகளை மேலும் சிக்கனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் முற்றி, அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தாலும், நாம் பாதிக்கப்படாமல் இருக்க இம்முடிவானது உதவும் என்றும், பொறுப்பானதுமான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.








