கோலாலம்பூர், ஜனவரி.13-
கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற்ற 30 இடங்களைத் தாண்டி, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட கட்சி இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் அம்னோ தோல்வியடைந்தாலும், இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளை 'இரண்டாம் நிலை' தொகுதிகளாகக் கட்சி கருதுகிறது. இத்தகைய தொகுதிகளில் மீண்டும் போட்டியிட அம்னோ ஆர்வம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெர்சத்து (Bersatu) கட்சி வசம் உள்ள தொகுதிகளில் அம்னோ போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அது ஒவ்வொரு தொகுதியின் தரவுகளையும் விரிவாக ஆய்வு செய்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளும் போது கட்சி தனது தனித்துவமான வியூகங்களைக் கொண்டிருக்கும் என்று ஸாஹிட் குறிப்பிட்டார்.
நாளை ஜனவரி 14 ஆம் தேதி அம்னோ பொதுப் பேரவை தொடங்கவிருக்கும் இவ்வேளையில் ஸாஹிட்டின் இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.








