கடந்த 10 மாதங்களுக்கு பிறகு எதிர்க்கட்சி எம்.பி.யாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தில் இன்று தமது முதல் உரையை நிகழ்த்திய மூவார் எம்.பி.யும், மூடா கட்சித் தலைவருமான சயிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நடப்பு அரசாங்கத்தை சாடினார். நடப்பு அரசாங்கம் பாசாங்குத் தனமாக செயல்படுகிறது என்று சையிட் சாடிக் முத்திரை குத்தினார்.
லஞ்ச ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் விடுதலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பதற்கு முன்மொழியப்பட்ட தீர்மானம் நேற்று நிராகரிக்கப்பட்டதை அந்த இளம் எம்.பி. கடுமையாக சாடினார்.நீதிமன்ற விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்று நடப்பு அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், நடப்பு அரசாங்கத்தில் உள்ள இதே 70 எம்.பி.க்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களாக இருந்த போது, நீதிமன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை மறந்து விட்டார்களா? என்று சையிட் சாடிக் கேள்வி எழுப்பினார். குறிப்பாக 1எம்டிபி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த விவகாத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாது என்று அன்றைய அரசாங்கம் வலியுறுத்திய போது, இதே 70 எம்.பி.கள்தான் அன்றைய நாளில் கடுமையாக எதிர்த்தனர் என்று சாடிக் நினைவுகூர்ந்தார். அப்படியென்றால், எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. இப்படிப்பட்ட பாசாங்குத்தனம் வேண்டாம் என்று சையிட் சாடி வாதிட்டார்.







