சுங்கை சிப்புட், ஆகஸ்ட்.02-
மஇகா மற்றும் இந்திய சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்த மஇகா தனது கதவைத் திறந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தியர்களைத் தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட மஇகா, சமுதாயத்தின் நலனை முன் நிறுத்த வேண்டிய கடப்பாடு கொண்டு இருப்பதால் அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இது முழுக்க முழுக்க மஇகாவின் நலனைக் கருத்தில் கொண்டு கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவே தவிர எந்தவொரு நெருக்குதலாலும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
கட்சிக்குத் தலைமையேற்று இருப்பவர், கட்சியின் நன்மைக்காக முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார். எனவே இவ்விவகாரத்தில் தாம் முடிவு செய்து விட்டதால், எந்தவொரு கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மஇகா தனது கதவுகளைத் திறந்துள்ளதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இன்று பேரா, சுங்கை சிப்புட், துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் பேரா மாநிலத்தின் 79 ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.