சிரம்பான், ஜூலை.19-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையே ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில், மசீச கட்சியானது பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் விமர்சித்துள்ளார்.
பாரம்பரியமாக மசீச போட்டியிட்டு வந்த Lobak, Mambau, மற்றும் Lukut ஆகிய மூன்று தொகுதிகளிலும் போட்டியிடாமல், அவற்றை பெரிக்காத்தான் நேஷனலுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிற தொகுதிகளில் நேரடி போட்டியைச் சந்திப்பதற்காக மசீச எடுத்துள்ள இந்த வியூகமானது, பெர்சாத்து வேட்பாளர்கள் களமிறங்காமல் இருந்திருந்தால் வெற்றிகரமாக இருந்திருக்கும் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மேலும், Lobak, Mambau மற்றும் Lukut ஆகிய மூன்று தொகுதிகளும் மசீச, ஜசெக ஆகிய இரு கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவற்றில், Lobak தொகுதியில் மாநிலத்திலேயே அதிகளவிலான சீன வாக்காளர்கள் உள்ளதாகவும், Lukut மற்றும் Mambau தொகுதிகள் முன்னதாக மசீச கட்சியின் மூத்த தலைவர்களின் வசமிருந்த முக்கிய தொகுதிகள் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளுக்காக இவ்வளவு தாராள மனப்பான்மையுடன் இருந்த மசீச தலைவர் Wee Ka Siong-கிற்கு நன்றி தெரிவித்துள்ள அந்தோணி லோக், அவர்கள் இடத்தில் ஜசெக இருந்திருந்தால் இவ்வளவு தாராள மனப்பான்மையுடன் இருந்திருக்காது என்றும் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.








