Aug 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பாப்பாராயுடு வீரமான் உட்பட பத்து பேர் பதவியேற்பு
அரசியல்

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பாப்பாராயுடு வீரமான் உட்பட பத்து பேர் பதவியேற்பு

Share:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவின் சகோதரரும், பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாபாராயுடு வீரமான் உட்பட 10 பேர், இன்று பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

கிள்ளான், இஸ்தானா ஆலாம் ஷாவில் இன்று பிற்பகலில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா முன்னிலையில் அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான 10 இடங்களில் டிஏபி க்கு 4 இடங்களும் , பிகேஆர் கட்சி க்கு 3 இடங்களும், அமானாவிற்கு 2 இடங்களும் , பாரிசான் நேஷனலுக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 10 பேரில் எழுவர் புதிய முகங்கள் ஆவர்.
4 இடங்களை பெற்றது மூலம் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் அதிக இடங்களை கொண்ட கட்சியாக டிஏபி விளங்குகிறது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இரண்டாவது தவணையாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி,இன்று காலை 11 மணியளவில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்ட வேளையில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பிற்பகலில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் ரகசிய காப்புப்பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த பத்து பேருக்கும் வழங்கப்படவிக்கும் இலாகாக்கள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறும் முதலாவது ஆட்சிக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

டிஏபி சார்பில் 4 ஆட்சிக்குழு உறுப்பினர்களாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் அங் செ ஹன் , செகின்சா சட்டமன்ற உறுப்பினர் அங் சுயீ லிம், பண்டார் உதாமா சட்டமன்ற உறுப்பினர் ஜலாலியா ஜமாலுதீன் மற்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிகேஆர் கட்சி சார்பில் 3 ஆட்சிக்குழு உறுப்பினர்களாக செரி செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஃபாமி ஙாஹ், கோத்தா அங்கரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹாலினி, மற்றும் தஞ்சோங் செபட் சட்டமன்ற உறுப்பினர் போர்ஹான் அமன் ஆஹா ஆகியோர் நியமிக்கப்பட்டள்ளனர்.

அமானா கட்சி சார்பில் 2 ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பாண்டன் இன்டா சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஹாஷிம் மற்றும் தாமான் டெம்பிள் சட்டமன்ற உறுப்பினர் அன்பால் சாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாரிசான் நேஷனலுக்கு ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுங்கை ஆயேர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் ரிசாம் இஸ்மாயில் பாரிசான் நேஷனல் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசாம் இஸ்மாயில் ஆட்சிக்குழுவில் இடம் பெற்று இருப்பது மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பாரிசான் நேஷனல் இடம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி 34 இடங்களை வென்ற வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் 22 இடங்களை வென்றது.

Related News