பேராக் மாநிலத்தின் 212 பக்கங்கள் கொண்ட நான்காவது ஆண்டு மேம்பாட்டு அறிக்கையை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி முகமட் இன்று அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். இதில் 2022 முதல் தற்போது வரை மாநில அரசின் வருவாய், முதலீடு, சுகாதாரம் மற்றும் மக்களின் நலன் சார்ந்த சாதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வையொட்டி, மனிதவளத் துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,117 காலிப் பணியிடங்களை வழங்கின. இதில் புரோட்டான் நிறுவனம் நிகழ்விடத்திலேயே நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி பெற்றவர்களுக்கு உடனடி பணிநியமனக் கடிதங்களை வழங்கியது. இதுவரை 400 பேர் பங்கேற்ற நிலையில், 100 பேர் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
இம்முகாமில் இந்திய இளைஞர்களின் பங்கேற்பு 8 விழுக்காடு மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன், "வேலை கிடைக்கவில்லை என்று வீட்டில் இருப்பதை விட, இதுபோன்ற முகாம்களில் கலந்துகொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
புரோட்டான் போன்ற நிறுவனங்கள் தரமான பயிற்சி, போட்டித்தன்மை மிக்க சம்பளம் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே, இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்" என டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.










