பெர்கெசோவின் கீழ் செயல்படுத்தப்படும் 'லிண்டுங் 24 ஜாம்' திட்டம், தொழிலாளர்களுக்குச் சுமை அல்ல, மாறாக மிகவும் மலிவு விலையிலான ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாதாந்திர ஊதியத்தில் 0.75 சதவீத பங்களிப்பைக் கொண்ட இத்திட்டம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விபத்துகள், ஊனம் அல்லது வருமானம் இழப்பு போன்ற எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படும்போது ஒரு முக்கிய பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஜூன் 1 முதல், 90 லட்சத்திற்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் பணி தொடர்பான விபத்துகள் தவிர்த்த பிற விபத்துகளுக்கும் இதன் மூலம் தானாகவே முழுமையான காப்பீடு பெற்றுள்ளனர் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.
இதற்கிடையில், கடந்த 2020 முதல் இந்த மாதம் வரை நெகிரி செம்பிலானில் 'மைஃபியூச்சர்ஜாப்ஸ்' இணையதளத்தில் 145,625 வேலை தேடுபவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், 45,535 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், வேலை தேடுபவர்களின் திறனை மேம்படுத்த 'மைஃபியூச்சர்ஜாப்ஸ் ஏஐ+' என்ற புதிய முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தினார்.












