மொத்தம் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண மாற்றம் மோசடியில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், பெரிக்காத்தான் நேஷனலின் தாசீர் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான் மீது 18 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் நீதிபதி சுசனா ஹுச்சின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட வான் சைஃபுல் க்கு எதிராக 18 மோசடிக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு சிறைத் தண்டனையும் 50 லட்சம் வெள்ளி அபராதமும் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பணமாற்ற நடவடிக்கைகள், பயங்கரவாத நிதி அளிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த இளம் எம்.பி. குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, கொரோனா தொற்று காலகட்டத்தில் பூமிபுத்ரா குத்தகையாளர்களை மீட்சிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஜானா விபாவா நிதித்திட்டத்தில் பெரும் தொகை வான் சைபுல் மூலம் மடைமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








