கோலாலம்பூர், ஜூலை.19-
அரசாங்கத்தைச் சாராத அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நேற்று திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
பலதரப்பட்ட கட்சிகளை உள்ளடக்கிய ஓர் புதிய கூட்டணியை நிறுவுவதற்கு முகைதீன் வியூகம் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கூறியிருந்தார்.
அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவி இறங்கச் சொல்லி, வரும் ஜுலை 26 ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் துருன் அன்வார் பேரணி நடத்துவதற்குத் திட்டப்பட்டுள்ளது.
இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன், அரசாங்கத்தைச் சாராத பல தரப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் அவற்றின் தலைவர்களுடன் தலைநகரில் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் பாஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. எனினும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட இந்தச் சந்திப்பில் மூடா கட்சியின் இடைக்காலத்ப் தலைவர் அமீரா அயிஷா மற்றும் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் துணைத் தலைவர் S. அருட்செல்வன் உட்பட எதிர்க்கட்சிகளின் 11 தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேறும் அரசாங்க நடவடிக்கைகளை எல்லா நிலைகளிலும் சீர்தூக்கிப் பார்க்க பல தரப்பட்ட கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணியை அமைக்கத் தாம் உத்தேசித்துள்ளதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.