பேராக் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவின் 37ஆவது மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டை மாநில ம.இ.கா. தலைவர் டான் ஸ்ரீ எம். ராமசாமி மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
மேலும் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஸ் கணேசன் தலைமையுரையாற்றிய நிலையில், ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் ஒதுக்க வேண்டும், இந்திய இளைஞர் தொழில்முனைவோருக்கு 10,000 முதல் 50,000 ரிங்கிட் வரை கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தியாகேஸ் தெரிவித்தார்.
மேலும், பேராக் மாநில திவேட் மன்றத்தில் ம.இ.கா. இளைஞர் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், யாயாசான் பேராக் மூலம் இந்திய இளைஞர்களின் தொழில்முனைவு நடவடிக்கைகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தது 1,000 இந்திய இளைஞர் தொழில்முனைவோருக்கு கடனுதவியுடன் தொழில் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேவேளையில், ரூமா பேராக்கூ வீடமைப்புத் திட்டத்தில் B40 இந்திய இளைஞர் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 2025-ஆம் ஆண்டு இந்திய மாணவர்களுக்கு 1,537 மெட்ரிகுலேஷன் இடங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் 2,500 இடங்களை உறுதி செய்து உயர்கல்வியில் இந்திய மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் எடுக்கும் கட்சியின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.








