இந்தியா, மார்ச் 31 -
இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங்கில் “பெஞ்ச் ஸ்ட்ரென்த்” அதிகரித்து, ஏராளமான இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டதற்கு ஐபிஎல் டி20 தொடர் முக்கியக் காரணம். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குள் வந்துள்ளனர்.
அந்த வகையில் அதிவேகமாகவும், துல்லியத்துடனும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர் நேற்றைய ஆட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தனது வேகத்தாலும், லைன் லென்த்தாலும், ஷார்ட் பந்துவீச்சாலும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் ஈர்த்துள்ளார்.
மயங்க் யாதவ் பந்துவீச்சை பிசிசிஐ தேர்வுக் குழுவினர் பார்த்திருந்தால், நிச்சயமாக டி20 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். லக்னௌவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.
முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் லக்னௌ அணியும் தனது புள்ளிக்கணக்கைத் தொடங்கி, 0.025 என்று நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளது. இந்தத் தோல்வியால் பஞ்சாப் கிங்ஸ் நிகர ரன்ரேட் மைனசில் சரிந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்னும் புள்ளிக்கணக்கை மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மட்டும்தான் தொடங்கவில்லை.