சௌதி அரெபியா, மார்ச் 1 -
சவுதி அரேபியக் காற்பந்துச் சம்மேளனம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதித்துள்ளது. கடந்த வாரம் நடந்த ஆட்டமொன்றின்போது திடலில் அவர் சினமூட்டும் சைகையைச் செய்ததாகச் சம்மேளனம் கூறியது.
அந்தச் சைகைக்காக அல் நாசர் அணி ஆட்டக்காரரான ரொனால்டோவுக்கு 30,000 ரியால் ($8,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டத் தடை, அபராதம் ஆகியவற்றை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் சம்மேளனம் கூறியுள்ளது.
அல்-ஷபாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவின் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பிறகு, அவரது பரம வைரி லயனல் மெஸ்ஸியின் பெயரை உரக்கக் கத்திக்கொண்டிருந்த ரசிகர்களை நோக்கி ரொனால்டோ மீண்டும் மீண்டும் சினமூட்டும் சைகையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அது சவுதி அரேபியக் காற்பந்துச் சம்மேளனத்தின் கவனத்துக்கும் சென்றதாக ஏ.ப்.பி தெரிவித்தது.
இதற்கிடையே ரொனால்டோ, வெற்றியைக் கொண்டாடவே அந்தச் சைகையைச் செய்ததாகக் கூறினார் என்று சவுதியிலுள்ள விளையாட்டுச் செய்தித்தாள் அல்-ரியாடியா தெரிவித்தது.