Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!
உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!

Share:

தெற்கு பிலிப்பைன்ஸ் தீவான மிண்டானாவோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாரங்கனி மாகாணக் கடற்கரையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில், அதிகாலை வேளையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் நடுக்கம் மிண்டானாவோ பகுதி முழுவதும் உணரப்பட்டதோடு, சுமார் 420 கி.மீ தொலைவில் உள்ள இந்தோனேசியாவின் சுலவேசி தீவிலும் பலமாக எதிரொலித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த இயற்கைச் சீற்றத்தினால் ஜெனரல் சாண்டோஸ் நகரம் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்குள்ள உணவகம் அமைந்திருந்த கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நோட்ரே டேம் பல்கலைக்கழகக் கட்டிடம் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. நிலநடுக்கத்தின் போது பள்ளி மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் அரசு ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரை முடுக்கிவிட்டுள்ளது. வீழ்ந்த இடிபாடுகள் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியே பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ், வட இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சபா மாநிலக் கடலோரப் பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகள் 6 மணி நேரத்திற்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டன.

பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், மிண்டானாவோ பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். "மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது; மிண்டானாவோ பகுதியை நாங்கள் கைவிட மாட்டோம்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெனரல் சாண்டோஸ் நகரில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பசிபிக் ‘நெருப்பு வளைய’ பகுதியில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களை எதிர்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News