தோக்யோ, ஜூலை.30-
ரஷ்யா, ஜப்பான் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவாகி உள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், அவாச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சட்கா நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கம்சட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸ், பாலாவ், மார்ஷல் தீவுகள், குக், கொஸ்ரோ பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பக்கூடும்.
தென் கொரியா, வட கொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்குக் கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.








