கோலாலம்பூர், ஜூன்.07-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஜூன் 8-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாக ஜப்பானுக்குப் புறப்படுகின்றார்.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அன்வாரின் இந்தப் பயணமானது அமையவுள்ளதாக வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இப்பயணத்தின் போது ஜப்பான் பிரதமர் Sanae Takaichi மற்றும் அன்வாருக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் பயணிக்கின்றனர்.
மேலும், இச்சந்திப்பின் போது, இரு நாடுகளின் தலைவர்களும், இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்ட அனைத்துலக விவகாரங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கவுள்ளனர்.
இதனிடையே, ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் Kihara Minoru, செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசியா மற்றும் ஜப்பான் இருநாடுகளும் முழுமையான வியூகக் கூட்டாளிகளாக, வலுவான உறவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஜப்பானின் முன்னெடுப்பிற்கு மலேசியாவுடனான உறவு மிக முக்கியமானது என்றும், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








