பாரீஸ்: பிரான்ஸ் நாடே கடந்த சில நாட்களாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 17 வயது சிறுவன் நஹெலை போலீசார் சுட்டுக் கொன்றதே இதற்குக் காரணம். ஒட்டுமொத்த நாட்டையும் கொதித்து எழ வைத்த இந்த சிறுவன் யார் என்பது குறித்து பார்க்கலாம்
ஒட்டுமொத்த பிரான்ஸும் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே மக்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கிறது. பல இடங்களில் இந்த போராட்டங்களில் கலவரமும் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கே 492 இடங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், 2000 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.. இப்படி ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தளவுக்கு நிலைமை கையை மீறிச் செல்ல என்ன காரணம். இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம். பிரான்ஸ் நாட்டில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் நஹெல் என்ற இளைஞரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அந்த சிறுவன் வாகனம் ஓட்டியதால், அவனைச் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது தொடர்பாகப் பரவும் வீடியோ நேர்மாறாக இருக்கிறது.
இதில் இரண்டு அதிகாரிகளும் அந்த காருக்கு மிக அருகில் வந்து துப்பாக்கியை காட்டி அந்த சிறுவனை மிரட்டுகின்றனர். ஒருவர் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்து, "உன் தலையிலேயே நிச்சயம் தோட்டா பாயப் போகிறது" என்று மிரட்டுகிறார். இதனால் பயத்தில் அந்த சிறுவன் திடீரென காரை எடுத்துவிட்டுக் கிளம்பவே அந்த அதிகாரி சுட்டுள்ளார். இதில் அந்த சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கே நடந்துள்ளது.இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
போராட்டம் உச்சமடைய இந்த வீடியோவும் முக்கிய காரணம். ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையும் வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ள அந்த சிறுவன் யார் என்பது குறித்துப் பார்க்கலாம். குறைந்த வருமானம் கொண்ட பகுதிகள், கறுப்பினத்தவர் வாழும் பகுதிகளில் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாக நீண்ட காலமாகப் புகார் இருக்கும் நிலையில், நஹெலின் மரணம் மக்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது