ஜகார்த்தா, ஜூலை.20-
இந்தோனேசியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசுக் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இந்தோனேசியாவில் பல தீவுகள் உள்ளன. அதில், மனாடோ-தஹுடா தீவுகளுக்கு இடையே கே எம் பார்சிலோனா விஏ என்ற சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது. இது அருகில் உள்ள தீவுகளுக்கும் சென்று வருகிறது.
மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் இந்தக் கப்பல் சென்று கொண்டு இருந்தது. திடீரென இந்தக் கப்பலில் தீப்பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த வேளை 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.








