வடக்கு சீனாவில் பெய்த கனமழை காரணமாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மட்டுமல்லாது கோடிக்கணக்கான அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
டோக்சுரி சூறாவளி காரணமாக வட சீனம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி இப்பகுதிகளில் சுமார் 580.9 மி.மீ வரை மழை பொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போது பெய்த மழையின் அளவு வெறும் 25 மி.மீதான். ஆனால் சீனாவின் தலைநகரில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 196.9 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 31,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
பெய்ஜிங்கின் ஃபெங்டாய் மாவட்டத்தை ஹெபேயில் உள்ள ஷாசெங்குடன் இணைக்கும் 105 கி.மீ ரயில் பாதை முழுவதும் மழை நீரில் மூழ்கி உள்ளதால் ரயில் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4,000 கட்டுமான பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. உணவு பொருட்களை பொறுத்த அளவில் சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ.550 அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.