இந்தோனேசியாவில் காட்டுத்தீ காரணமாக பரவி வரும் கடும் புகைமூட்டத்தால், பல பகுதிகளில் பள்ளிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன.
போர்னியோ தீவில் உள்ள மேற்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள பொந்தியனாக் நகரிலும் காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளிகளை மூட மேயர் எடி ருஸ்டி கம்டோனோ உத்தரவிட்டுள்ளார். காற்றின் தரம் சீராகும் வரை மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, காட்டுத்தீ புகை அண்டை நாடான மலேசியாவையும் பாதித்துள்ளது. சரவாக் மாநிலத்தின் செரியான் நகரில் காற்று மாசு குறியீடு 190-ஐ எட்டி, “ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்” அளவில் பதிவாகியுள்ளது.
நீண்ட வறட்சி காலமும், எல் நினோ தாக்கமும் காட்டுத்தீ பரவலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








