Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு: அச்சத்தில் பாகிஸ்தான்
உலகச் செய்திகள்

இந்தியா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு: அச்சத்தில் பாகிஸ்தான்

Share:

இஸ்லாமாபாத், ஏப்ரல்.24-

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையை எந்நேரத்திலும் இந்தியா மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் விமானப் படையைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீவிரவாதிகளின் பஹல்காம் தாக்குதல் எழுப்பிய அதிர்வலைகள் நாடு முழுவதும் இன்னமும் ஓயவில்லை. 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்ற ஒற்றை புள்ளியில் மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

அதே சமயத்தில் இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று பாகிஸ்தானும் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது. நிச்சயம் பதிலடி உண்டு என்று உறுதியான குரல்கள் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது தரப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஆயத்தமாகி இருக்கிறது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. அதன் விளைவாக இந்தியாவின் தரப்பில் இருந்து எப்படியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்(இது ஒரு ராணுவ தாக்குதல், இலக்கை மட்டுமே குறிவைத்து தாக்கும் நடவடிக்கை) இருக்கலாம் என்பதால் அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

அதற்காக, தமது விமானப்படை விமானங்களை பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லையோர கிராமங்களையும் காலி செய்துள்ளது. ராணுவத்தையும், ஐஎஸ்ஐ-யையும் உஷார் நிலையில் வைத்து இருக்கிறது.

அசாதாரணமான நடமாட்டத்தைப் பாகிஸ்தான் கண்டறிந்துள்ளதாகவும், வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும், பாகிஸ்தான் அதற்கு அஞ்சுவதாகவும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related News