திருவனந்தபுரம், ஜனவரி.20-
கேரளாவில், பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர், தனது அருகில் நின்ற ஆடவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஷிம்ஜிதா என்ற அந்த பெண், தனது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தனது அருகில் நிற்பவர் தன்னை உரசியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
அக்காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பலரும் தீபக்கை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, 42 வயதான தீபக் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
வைரலான அந்த வீடியோ குறித்து தீபக் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இந்தியா முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.








