அமிர்தசரஸ், மார்ச்.17-
பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள கோவிலில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாகுர்த்வாரா கோவிலில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியிருந்தன. அதில், மோட்டார் சைக்கிளில் கொடியுடன் வந்த இருவர் கோவிலை நோட்டமிட்டனர். பிறகு, பொருள் ஒன்றை உள்ளே வீசி விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் கோவிலில் குண்டு வெடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
அப்போது, கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பும் இல்லை. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவில் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பஞ்சாப் மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர் தப்பியோடி விட்டதாக அவர் கூறினார்.








