ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவா போல்டன் என்ற 3 வயது சிறுமி நியூரோபிளாஸ்டோமா என்ற நோயால் அவதி அடைந்து வருகிறார். இது ஒரு வகையான புற்றுநோய் ஆகும். தற்போது நோயின் தாக்கத்தில் 4-ஆம் நிலையை இவர் அடைந்துள்ளார்.
முன்னதாக, இந்த சின்ன குழந்தை அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்த நிலையில், அது வைரஸ் காய்ச்சல் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டனர். அவா போல்டனுக்கு லூகாஸ் என்னும் 5 வயது சகோதரன் இருக்கிறான். அந்த சிறுவன் உட்பட மொத்த குடும்பமும் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
அவா போல்டனை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.2.6 கோடி செலவாகும் என்றும், இதில் இருந்து மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோரான ஸ்காட் மற்றும் நடாலி போல்டன் ஆகியோரிடம் இவ்வளவு பெரிய தொகை இல்லாத நிலையில், ஆன்லைன் மூலமாக அவர்கள் உதவி கேட்டு வருகின்றனர்.