அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங்-787 விமான விபத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நெருங்கி வரும் வேளையில், இந்த விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல் தாமதப்படுத்தி வரும் இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியதில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், சர்வதேச விதிகளின்படி இறுதி அறிக்கையை வெளியிடுவதற்குப் பதிலாக, வெறும் 15 பக்கங்களைக் கொண்ட ஓர் இடைக்கால அறிக்கையை மட்டுமே தயாரிக்க இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் எஞ்சின் எரிபொருள் சுவிட்சுகள் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டதே எஞ்சின்கள் செயலிழக்க முதன்மைக் காரணம் என்றும், இதற்குப் பைலட்களின் தவறான முடிவே காரணம் என்றும் சில ஆரம்பகட்ட யூகங்கள் பரவின. இருப்பினும், பைலட் சங்கங்கள் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகின்றன. விமானத்தின் மத்திய தரவு நெட்வொர்க்கில் ஏற்பட்ட கடுமையான தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பல அமைப்புகள் ஒரே நேரத்தில் செயலிழந்தன என்றும், எரிபொருள் சுவிட்ச் என்பது ஒரு அறிகுறியே தவிர விபத்தின் மூலக்காரணம் அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தியப் புலனாய்வு அமைப்பு இறுதி அறிக்கையை வெளியிடாமல் இழுத்தடிப்பதன் மூலம், இந்த விசாரணையில் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் போன்ற சர்வதேச அமைப்புகளின் தலையீட்டைத் தவிர்க்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் இருந்து பெங்களூரு வந்த மற்றொரு ஏர் இந்தியா போயிங்-787 விமானத்திலும் இதே போன்ற எரிபொருள் சுவிட்ச் கோளாறு கண்டறியப்பட்டது இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. விபத்து நடந்து ஓராண்டாகியும் தங்களுக்கு முறையான பதிலோ அல்லது நீதியோ கிடைக்கவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், பைலட் சங்கங்களும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மீது தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.








