கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் 'ஜெயிலர்'. சமீப காலமாக சில படங்களில் மிஸ்ஸான ரஜினியின் ஸ்டைல், கரிஸ்மாவை இப்படத்தில் சரியான அளவில் திரையில் கொண்டு வந்து மேஜிக்கை நிகழ்த்தினார் நெல்சன் திலீப்குமார். இதுவே 'ஜெயிலர்' படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர முக்கியமான காரணமாக அமைந்தது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினி ஜெயிலருக்கு முன்பாக நடித்த படங்கள் சில விமர்சனரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தன. என்னதான் வசூலில் லாபம் பார்த்தாலும், ரஜினி படங்களுக்கே உண்டான மேஜிக் சமீப காலமாக மிஸ் ஆவதாக ரசிகர்கள் பீல் செய்தனர். இந்த குறையை 'ஜெயிலர்' படத்தின் வாயிலாக நிறைவு செய்தார் நெல்சன் திலீப்குமார்.
கிட்டத்தட்ட அவருக்குமே இப்படத்தை கட்டாயம் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. ஏனென்றால் ஜெயிலருக்கு முன்பாக நெல்சன் திலீப்குமார் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய்யை வைத்து இயக்கிய 'பீஸ்ட்' படம் ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கியது. இதனால் நெருக்கடியில் இருந்த நெல்சன் திலீப்குமார், ரஜினியின் 'ஜெயிலர்' வாயிலாக தரமான கம்பேக்கை கொடுத்தார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள பிரபலம் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்த ஜெயிலரில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, மிர்னா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் பான் இந்திய அளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
'ஜெயிலர்' வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக அப்போதே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் ரஜினி தனது அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாக உள்ளார். இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை உறுதி செய்துள்ளார்.