பெங்களூரு, ஜூலை.15-
பழம் பெரும் நடிகை மறைந்த சரோஜா தேவியின் நல்லுடல், அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மறைந்த கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் உடல் பெங்களூரு ராம்நகராவில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்கு இணையாக சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த சரோஜா தேவி நேற்று திங்கட்கிழமை தனது 87 வயதில் காலமானார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜா தேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சரோஜாதேவியின் மறைவுச் செய்தி அறிந்த நடிகர்-நடிகைகள், திரையுலகத்தினர் மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சரோஜா தேவியின் இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வாள் போன்ற கண்ணழகி என அனைவராலும் வர்ணிக்கப்பட்ட சரோஜா தேவி, தன் இறப்புக்கு பின்னர் கண்களைத் தானமாக வழங்க விரும்பினார். அதன்படி பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.