சென்னை, டிசம்பர்.04-
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக தனது 86-ஆவது வயதில் இன்று காலமானார்.
உடல்நலக் கோளாறினால், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் காலமானார்.
இதனையடுத்து, அவரது உடலானது ஏவிஎம் ஸ்டியோவில் உள்ள 3 வது தளத்தில் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
இவர் தமிழக அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.








