என் இனிய தமிழ் மக்களே என தனது கம்பீர குரலால் தமிழக மக்களைக் கவனிக்க வைத்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் முதல் படத்திலேயே பாராட்டைப் பெற்றார்.
அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, கடலோரக் கவிதைகள், கல்லுக்குள் ஈரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இவர் இயக்கியதில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான முதல் மரியாதை திரைப்படம் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளமாக எவர் கிரீன் திரைப்படமாக உள்ளது.
இயக்குனர் என்பதைத் தாண்டி அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர் தனது மகன் மனோஜ் இறப்பிற்குப் பிறகு வீட்டிலேயே முடங்கினார். தற்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதில் இருந்து பாரதிராஜா உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதால் ICUவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.








