ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை உடனடியாக இயக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு நெல்சன் வந்துவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு இன்னமும் இயக்குநர் அமையவில்லை என்பது தான் கள யதார்த்தமாக உள்ளது. தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கதை சொல்லி வந்தாலும், அவருக்கு பொருந்தும் அளவுக்கு யாருமே அவரை கவரவில்லை என்கின்றனர்.
சிம்புவை வைத்து 49வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில், அண்மைய தகவலாக அந்த வரிசையில் டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பெயர் அடிபட்டு வருகிறது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், பார்க்கிங் டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என மொத்தம் 3 படங்களை சிம்பு அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது அந்த 3 படங்களையும் விட்டு விட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் மட்டுமே சிம்பு நடித்து வருகிறார். எஜிஎஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்க சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. காட் ஆஃப் லவ் என்கிற அப்டேட்டுடன் வெளியான அந்த படம் தற்போது கிட்டத்தட்ட கைவிடப்பட்டு விட்டது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர். ஏஜிஎஸ் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தைத் தான் தயாரிக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்துக்கு அஸ்வத் மாரிமுத்து கதை சொல்லியிருப்பதாகவும் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.








