இந்தியா, ஜூலை 03-
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். ஆனால், இதில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர்தான்.
பாகுபலி திரைப்படம் வரும் வரை, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக, திகழ்ந்த படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டிருந்த இப்படம், ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக சொல்லப்பட்டது.
எந்திரன் படத்தின் கதை எழுதும் பணி, 1996ஆம் ஆண்டு ‘இந்தியன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகளின் போதே தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நெடுங்காலமாக பேப்பர்-பேனாவிலேயே இருந்த இந்த கதை, அதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகுதான் ஷூட்டிங் தொடங்க ஆரம்பித்தது. இந்த படத்தில் ரஜினியை நடிக்க தேர்வு செய்வதற்கு முன்பு, ஷங்கர் தேர்ந்தெடுத்த நடிகரே வேறு ஒருவர்தான். அவர் யார் தெரியுமா?
எந்திரன் படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர், ‘ரோபாே’. இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன்தான். இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் பணிகள் நடைப்பெற்றன. ஆனால், சில நாட்களிலேயே இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அப்போது, இவர் விலகியதற்கான காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்துதான், ரஜினி இதில் ஹீரோவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல, ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நடிக்க இருந்தவர் இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தாதான். இவரும் கமல் விலகிய பின்னர் ரோபோ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
தான் ரோபோ படத்தில் விலகியது குறித்து, கமல் ஹாசனே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது, ஷங்கரும், எழுத்தாளர் சுஜாதாவும் தானும் இணைந்து, ‘ஐ ரோபோட்’ எனும் நாவலை தழுவி படத்தை இயக்க 90களில் திட்டமிட்டதாகவும், அதற்காக லுக் டெஸ்கள் நடந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது பட்ஜெட் மற்றும் சம்பளம் ஆகியவை தடைக்கற்களாக இருந்ததால் அப்படம் நடைபெறாமல் போனதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த காரணங்களுக்காக இப்படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதனால் தான் இதில் இருந்து விலகியதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும், ஷங்கரின் கடின உழைப்பால்தான் எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.