காற்றுத் தரக் குறியீடு எனப்படும் எ.பி.ஐ அளவு 200-ஐக் கடந்தால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
மாநில மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எ.பி.ஐ அளவு 100-ஐக் கடந்தால், மாணவர்கள் பங்கேற்கும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். வெளிப்புற ஒன்றுகூடல்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளையும் ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூடுபனி நிலவரம் மற்றும் எ.பி.ஐ அளவை மாநில, மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வோங் தெரிவித்தார்.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிலைமைக்கு ஏற்ப தேவையான முடிவுகளை பள்ளி நிர்வாகங்கள் எடுக்கலாம் என்றும் வோங் கா வோ குறிப்பிட்டார்.








