மூத்த வழக்கறிஞரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான சைரஸ் தாஸ், சட்டத்துறை, மனித உரிமைகள் மற்றும் சட்டம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக, இந்த ஆண்டுக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஆனந்த் ராஜ், 77 வயதான சைரஸ் தாஸுக்கு இந்த உயரிய விருதை வழங்கினார். 2012ஆம் ஆண்டு இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இதுவரை 14 பேர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
சைரஸ் தாஸை சிறந்த சட்ட மேதை, சட்ட அறிஞர் என வர்ணித்து, மலேசிய தேசிய மனித உரிமைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷித் இஸ்மாயில் விருதுக்கான பாராட்டுரையை வாசித்தார்.
விருதை ஏற்றுக்கொண்ட சைரஸ் தாஸ், அனைத்து அதிகாரமும் மக்களால் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்றும், அந்த அதிகாரம் சட்டத்திற்கு உட்பட்டதே என்றும் வலியுறுத்தினார்.
சட்டம் உறுதி செய்யப்படுவதையும், அரசியலமைப்பின் மேலாதிக்கத்தையும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடர்ந்து உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் சைரஸ் தாஸ் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை அடியோடு மாற்றுவதற்கான எந்த முயற்சிகளுக்கும் எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சைரஸ் தாஸ் வலியுறுத்தினார்








