Jul 25, 2026
Thisaigal NewsYouTube
மாமாக் உணவகங்களில் வெளிநாட்டு தொழிலாளர் தட்டுப்பாடு: ஒரு மாதத்தில் தீர்வு காண அன்வார் அதிரடி உத்தரவு
தற்போதைய செய்திகள்

மாமாக் உணவகங்களில் வெளிநாட்டு தொழிலாளர் தட்டுப்பாடு: ஒரு மாதத்தில் தீர்வு காண அன்வார் அதிரடி உத்தரவு

Share:

மாமாக் உணவகம் என்றழைக்கப்படும் இந்திய முஸ்லிம் உணவகத் துறையில் நிலவி வரும் வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரசுத் துறைகளுக்கு ஒரு மாத காலக்கெடு வழங்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 27 -ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் துறைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரசாங்கத் துறைகள் அடையாளம் கண்டு, ஒரு மாதத்திற்குள் அதற்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், தொழிலாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் அதிக அளவில் மலேசியாவில் உள்ள நிலையில், பற்றாக்குறைகளைச் சமாளிக்க எல்லைகளை முழுமையாகத் திறக்க முடியாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

என்றாலும், வணிக நிறுவனங்களின் உடனடி மனிதவளத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, நாட்டில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம், சமநிலையான அணுகுமுறையை பின்பற்றும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை, பட்டர்வொர்த் , பிச்சா மாநாட்டு மையத்தில் 2030 ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்திய முஸ்லிம் உருமாற்றத்திற்கான கட்டமைப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு அறிவிப்பை வெளியிட்டார். .

Related News