வாகனங்களைக் குலோன் செய்வதோடு வாகனங்களைத் திருடும் கும்பலொன்றின் நடவடிக்கையைக் காவல்துறை முறியடித்துள்ளது. அதன் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
33 முதல் 60 வயதுக்குட்பட்ட அந்தச் சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வாகன அடையாளங்களை குலோன் செய்து கார்களை மறுவிற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு கும்பல் குறித்து சுமார் ஐந்து மாதங்களாக உளவுத் தகவல்களைச் சேகரித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ குமார் கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர், வாகனத் திருட்டு வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதே வேளை, பல்வேறு டொயோட்டா ரகங்கள், ஹோண்டா சிட்டி கார்கள் மற்றும் மஸ்டா வாகனங்கள் உட்பட, மொத்தம் சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12 வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்ததாக டத்தோ குமார் தெரிவித்தார்.
இவற்றில், எட்டு வாகனங்களின் அடையாளங்கள் மாற்றப்பட்டிருந்தன, அதே சமயம் நான்கு சிங்கப்பூரிலிருந்து திருடப்பட்டவை என உறுதிச் செய்யப்பட்டன.
குலோன் செய்யப்பட்ட வாகனங்களின் சட்டகம் மற்றும் இயந்திர எண்கள் மாற்றப்பட்டிருந்ததும், சிலவற்றின் அசல் அடையாளங்களைக் கண்டறிய முடியாத அளவிற்கு அவை மாற்றப்பட்டிருந்ததும் தடயவியல் சோதனைகளில் கண்டறியப்பட்டது.
இக்கும்பல், திருடப்பட்ட வாகனங்களை அல்லது முழுமையாகச் சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. அதோடு குலோன் செய்யப்பட்ட சில வாகனங்கள் செல்லுபடியாகும் சாலைப் போக்குவரத்துத் துறை ஆவணங்களைக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








