கடந்த மாதம் பெண் பயணியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர், ஆயர் கெரோ மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றம் சாட்டப்பட்ட 40 வயதான முகமது அலி ஹுசின், நீதிபதி நூர் அஃபிகா ராதியா சைனுரின் முன்னிலையில் ஆஜராகி, தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து குற்றமற்றவர் என வாதிட்டார்.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த மே 27-ஆம் தேதி மதியம் சுமார் 12.40 மணியளவில், புரோட்டான் சாகா காரில், ஜாலான் புக்கிட் ரம்பாய், தாமான் புக்கிட் ரம்பாய் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, 27 வயதுடைய பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கில் நடந்து கொண்டதாக, குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் முகமது அலி ஹுசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








