கடந்த மூன்று ஆண்டுகளில் இணைய மோசடிகள் தொடர்பாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 501 விசாரணை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணை ஆவணங்கள் தொடர்பாக சுமார் 45 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 8.7 மில்லியனுக்கும் அதிகமான குற்றச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023 முதல் இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையினர், காதல் மோசடி, இணையவழி வர்த்தக மோசடி மற்றும் முதலீட்டு மோசடி உள்ளிட்ட இணைய மோசடிகள் தொடர்பாக மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 501 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளதாக அவர் விவரித்துள்ளார்.
அவற்றில் 60 ஆயிரத்து 955 வழக்குகள் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், 24 ஆயிரத்து 681 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் செமின் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைபுதீன் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.








