மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மீதான வழக்கில், அரசு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அர்மடா நிதி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் சையத் சாதிக்க்கு வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், அப்பீல் நீதிமன்றத்தில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி அபு பக்கர் ஜாய்ஸ், தனியாக ஆஜராகி, கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ சே முகமது ருசிமா கசாலி மருத்துவ விடுப்பில் இருப்பதால், முழு அமர்வு இல்லாத நிலையில் தீர்ப்பை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேராவும் இடம்பெற்றிருந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் வசதிக்கு உட்பட்டு, அதன் தீர்ப்பானது வரும் ஜூலை 13-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் அபு பக்கர் ஜாய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.








