5.3 மில்லியன் மலேசியர்கள் பயனடையும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான ரஹ்மா பண உதவி – எஸ்டிஆரின் மூன்றாம் கட்ட உதவித் தொகை இன்று முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் 1.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
இந்த எண்ணிக்கை, ஆண்டின் தொடக்கத்தில் எஸ்டிஆர் பெற்ற 5 மில்லியன் பேரை விட மேலும் 3 லட்சம் பேர் அதிகமாகும்.
இதில் 3.9 மில்லியன் பேர் குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் 1.4 மில்லியன் பேர் துணையில்லாத மூத்த குடிமக்களாவர்.
மூன்றாம் கட்டத்தில் தகுதியைப் பொறுத்து 150 முதல் 600 ரிங்கிட் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. துணையில்லாத மூத்த குடிமக்களுக்கு 150 ரிங்கிட் வழங்கப்படும்.
2026ஆம் ஆண்டில் இதுவரை மூன்று கட்டங்களாக வழங்கப்பட்ட எஸ்டிஆர் உதவியின் மொத்த மதிப்பு 3.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
மேலும், எஸ்டிஆர் மற்றும் மாதாந்திர சாரா உதவிகளைச் சேர்த்து, தகுதியுள்ள சில பயனாளிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்தம் 3,300 ரிங்கிட் வரை அரசாங்க உதவியைப் பெற்றிருக்கலாம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.








