பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளையே மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டு பிகேஆர் தேசிய மாநாட்டில் பேராளர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
அதில் முக்கியமாக, பூடி95 இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், மாதாந்திர ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீட்டை மீண்டும் 300 லிட்டராக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற்றுள்ளது. சில பிரதிநிதிகள் இதனை 500 லிட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
தற்போது தகுதியுள்ள மலேசியர்கள் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் விலையில் ரோன்95 பெறுகின்றனர். ஆரம்பத்தில் 300 லிட்டராக இருந்த மாதாந்திர ஒதுக்கீடு, உலகப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளால் 200 லிட்டராகக் குறைக்கப்பட்டது.
பேராளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து, அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
பிரதமர் கூறியது போல், மக்களின் குரலைக் கேட்டு அதனைச் செயல்படுத்த வேண்டும்; எனவே நாளையே மேலும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி குறிப்பிட்டார்.








