அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல அவசர மாற்றங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை, இந்த மாத இறுதியில் தொடங்கி வெளியிடப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கக் கொள்கைகள், பக்காத்தான் ஹராப்பானின் உள்கட்சி விவகாரங்கள், ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மற்றும் தேசியத் திட்டங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த அறிவிப்புகளில் இடம் பெறும் என்றார்.
மேலும், ஆகஸ்ட் 31 தேசிய தினம், செப்டம்பர் 16 மலேசியா தினம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அக்டோபரில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் செயல்படுத்த வேண்டிய அவசர மாற்றங்கள் குறித்தும் தாம் அறிவிப்புகளை வெளியிடப் போவதாக அன்வார் கூறினார்.
மலாக்காவில் நடைபெற்று வரும் பிகேஆர் மாநாட்டில் பேசுகையில் அதன் தலைவருமான அன்வார் இதனைத் தெரிவித்தார்.
கொள்கைகள் பலமாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு பலவீனமாக இருப்பதே பிரச்சினை என்றும் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
பொருளாதார செயல்திறன் சிறப்பாக இருப்பதாகவும், இந்த காலாண்டில் வளர்ச்சி 6 விழுக்காடு வரை செல்லும் என பேங்க் நெகாரா கணித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அன்வார், அரசாங்கத்தின் தகவல் தொடர்பு பலவீனமாக இருந்தால், அந்தச் சாதனைகள் மக்களின் மனதைத் தொடாது என்றும் எச்சரித்தார்.
சபா, சரவாக் மாநிலங்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் தேசிய வளர்ச்சித் திட்டத்தில் ஒரு போதும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் அன்வார் உறுதியளித்தார்.








