கிளந்தான், கோத்தா பாருவையும், சிலாங்கூர், கோம்பாக்கையும் இணைக்கும் கிழக்கு கரையோர ரயில்பாதை நிர்மாணிப்பு திட்டமான ECRL- லின் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் டெர்மினல் நிலையத்தின் கட்டுமானப்பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
சிலாங்கூர், கோம்பாக்கில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங்- கும் கலந்து கொண்டனர்.
இந்த பெரும் திட்டத்தில் மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை நிரூபிப்பதற்காக வரலாற்றுப்பூர்மான இந்த நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
உலகில் மிக நீளமான படிகக்கல் உருவாகும் பகுதியான “Gombak Selangor Quartz Ridge” விளிம்பில் 8.73 ஹெக்டர் நிலப் பரப்பளவில் அமையவிருக்கும் கோம்பாக் ECRL ஒருங்கிணைந்த டெர்மினல் நிலையம், தற்போது உள்ள கோம்பாக் LRT நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கோம்பாக் LRT ரயில் நிலையம் , கிளானா ஜெயா LRT வழித்தடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ள கோம்பாக் ECRL டெர்மினல் நிலையம், வரும் 2026 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








