12 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்ஹெச்370 தொடர்பாக உண்மையை வெளிக்கொணரக் கோரி, சீன பயணிகளின் உறவினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்ஜிங் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகினர்.
முன்னதாக இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இழப்பீடு வழங்கப்பட்டாலும், விமானம் மாயமானதற்கான முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் அந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
239 பேருடன், கடந்த 2014-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட போயிங் 777 விமானம், ரேடார் திரையில் இருந்து திடீரென மாயமானது.
உலகின் மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், விமானமோ, பயணிகளோ, கருப்புப் பெட்டிகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பரில், சீனாவைச் சேர்ந்த எட்டு குடும்பங்களுக்கு தலா 2.9 மில்லியன் யுவான் இழப்பீடு வழங்குமாறு பெய்ஜிங் நீதிமன்றம் மலேசியா ஏர்லைன்ஸ்க்கு உத்தரவிட்டது.
இருப்பினும், இரண்டு குடும்பங்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








