தேர்தல் காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி நியாயமான முறையில் கண்காணிக்க வேண்டும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்துஸ்ரீ அசலினா ஒத்மான் வலியுறுத்தியுள்ளார்.
போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரசார உள்ளடக்கங்கள், பாரபட்சமாக தடுக்கப்படக் கூடாது என்றும், அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் எம்சிஎம்சி சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து, வெறுப்புப் பேச்சு, இனம், மதம், அரச குடும்பம் (3R) தொடர்பான சர்ச்சைகள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அசலினா ஒத்மான் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் விதிமீறும் பதிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது டிஜிட்டல் தளங்கள் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய கருவியாக மாறியுள்ளதால், கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், அதேவேளையில், அவை தவறாகப் பயன்படுத்தப்படாததை உறுதிப்படுத்த கண்காணிப்பும் அவசியம் என்றும் அசாலினா தெரிவித்துள்ளார்.








